இளம் தலைவர்களுக்கு பிகார் முதல்வர் இடம் கொடுப்பதில்லை என்று லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் விமர்சித்துள்ளார்.
லோக்ஜனசக்தியின் நிறுவனர் - தலைவரும், அவரது தந்தையுமான ராம்விலாஸ் பாஸ்வானுக்கு சடங்கு செய்யும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
அதற்கு முன்பு பேசிய அவர், ''பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இளம் தலைவர்களை பதவி நீக்கம் செய்கிறார். அவர்களை அனுபவமற்றவர்கள் என்று விமர்சிக்கிறார். ஆனால் அவர் இளைஞராக இருக்கும்போது தான் ஜனதா தளத்தை தொடக்கினார்.
மேலும், நான் ஏன் பிரதமர் நரேந்திர மோடியை மதிக்கக்கூடாது. என் தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மட்டுமே எனக்கு அதரவுக்கரம் நீட்டினார்.
லோக் ஜனசக்தி மற்றும் பா.ஜ.க. இடையே இடைவெளியை சித்தரிக்க முதல்வர் நிதிஷ் குமார் ஆர்வம் காட்டி வருகிறார். பா.ஜ.க. தலைவர்களிடமிருந்து விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்'' என்று சிராக் பாஸ்வான் கூறினார்.