துர்கா பூஜையின்போது கூட்டமாக அரங்கத்தில் நின்று பூஜை செய்யத் தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளை முதல் வரும் 26-ஆம் தேதி வரை துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், துர்கா பூஜையில் ஏராளமான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.
துர்கா பூஜையின்போது பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவது கரோனா பெருந்தொற்று பரவலை அதிகரிக்கும் என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் தரப்பில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது.
இந்தநிலையில், துர்கா பூஜையின்போது அரங்கத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், துர்கா பூஜை பந்தல்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து அதன் அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கரோனா பரவி வரும் நிலையில் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கரோனா பெருந்தொற்று சூழலை உணர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி மக்கள் செயல்பட வேண்டும்.
எந்த சமய பண்டிகைகளுக்கும் யாரும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் பெருந்தொற்று சூழலை உணர்ந்து மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.