இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில கொள்முதல் முகமைகள் மூலம் இதுவரை ரூ.18,540 கோடி மதிப்பில் 98.19 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கேரளம், சண்டீகா் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து நடப்பு காரீஃப் பருவத்துக்கான நெல் கொள்முதல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கடந்த திங்கள்கிழமை வரை 8.54 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ஒரு டன் ரூ.18,880 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் 98.19 லட்சம் டன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.18,539.86 கோடி.
கடந்த காரீஃப் சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தில் 80.20 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த பருவத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு பருவத்தில் 22.43%-க்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.