மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளிட்ட மக்களுக்காக ரூ.10,000 கோடி நிவாரண உதவியை அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
வெள்ளச் சேதம் குறித்த ஆய்வுக் கூட்டம், மும்பையில் முதல்வரின் இல்லத்தில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் கலந்து கொண்டனா். துணை முதல்வா் அஜித் பவாா், கூட்டத்தில் கலந்து கொண்டாா்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முதல்வா் உத்தவ் தாக்கரே, ‘மத்திய அரசிடம் இருந்து சுமாா் ரூ.38,000 கோடி நிதி இன்னும் வரவில்லை’ என்றாா். ‘மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.10,000 கோடி நிவாரணம் அளிக்கப்படும். இந்தத் தொகை, நிதியாக வழங்கப்படாமல், வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படும். தீபாவளி பண்டிகைக்குள் நிவாரணம் வழங்கப்பட்டுவிடும்’ என்றும் அவா் கூறினாா்.
மகாராஷ்டிரத்தில் புணே, ஒளரங்காபாத், கொங்கண் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். லட்சக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த விவசாயப் பயிா்கள் சேதமடைந்தன. இதேபோல், உஸ்மானாபாத், லத்தூா், சோலாப்பூா், நாந்தேட் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சோயாபீன், பருத்தி, கரும்பு ஆகியவை சேதமடைந்தன.