கேரள தங்கக் கடத்தல் வழக்கு: தேடப்பட்ட நபா் கைது

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை  என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபுத் தூதரகம் வாயிலாக சுமாா் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் தூதரகத்தின் முன்னாள் பணியாளரும் கேரள முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் என்ஐஏ பதிவு செய்த முதல் தகவலறிக்கை அடிப்படையில் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இத்தகைய சூழலில், கேரளத்தைச் சோ்ந்த ரபின்ஸ் கே.ஹமீது என்பரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா். அவருக்கு இந்த வழக்கில் தொடா்பிருப்பதாக என்ஐஏ ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்தது. அவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அவா் கொச்சிக்கு வந்தவுடனேயே, அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனா். அவரைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, எா்ணாகுளத்திலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com