சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படாதது ஏன்? - சிவசேனை கேள்வி

சுதந்திரப் போராட்ட வீரரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படாதது ஏன் என்று பாஜகவுக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.


மும்பை: சுதந்திரப் போராட்ட வீரரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படாதது ஏன் என்று பாஜகவுக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

சிவசேனையின் தசரா பேரணி ஆண்டுதோறும் மும்பையின் சிவாஜி பூங்காவில் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கரோனா பிரச்னை காரணமாக மும்பை தாதர் பகுதியில் உள்ள சாவர்க்கர் அரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரே சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யாய் கூறியதாவது: ஆட்சி அதிகாரத்துக்காக கொள்கையில் சிவசேனை சமரசம் செய்துகொண்டுள்ளது. சாவர்க்கரை விமர்சித்தபோது காங்கிரஸ் குறித்து உத்தவ் தாக்கரே எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால், வீர சாவர்க்கர் பெயரிலான அரங்கில் அவர் தசரா உரையாற்றியது நகைமுரணாகும் என்றார்.

பாஜகவின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனை தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரெளத் திங்கள்கிழமை கூறியதாவது: வீர சாவர்க்கர் தொடர்பான விமர்சனங்கள் குறித்து சிவசேனை என்றுமே மெளனம் சாதித்ததில்லை. வருங்காலத்திலும் இதுபோலவே செயல்படுவோம். சிவசேனையை குற்றம்சாட்டுபவர்கள், சாவர்க்கர் விஷயத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்ற வரலாற்றைப் புரட்டிப் பார்க்கட்டும்.

வீர சாவர்க்கர் என்றுமே எங்கள் வழிகாட்டி. எங்களை விமர்சிப்பவர்கள், சாவர்க்கருக்கு இதுவரை ஏன் பாரத ரத்னா விருது வழங்கவில்லை? கடந்த 6- 7 ஆண்டுகளாகப் பலருக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டுள்ளது. சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எது தடையாக உள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸூடன் இணைந்து சிவசேனை ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com