சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் 145ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து படேல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர், பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனைடைய முடியாது.
புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த தியாகத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்தனர். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை நாட்டின் நலன்கருதி தவிர்க்க வேண்டும் என்றார். சர்தார் வல்லபபாய் படேலில் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.