இந்தியப் பொருளாதாரத்தின் சரிவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்தான் தொடங்கியது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"ஜிடிபி -23.9. பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் அழிவு தொடங்கியது. அப்போது முதல் அடுத்தடுத்து தவறான கொள்கைகளையே அரசு அறிமுகப்படுத்தியது" என்றார்.
இதேபோல், பொருளாதார சரிவுக்கு அரசுதான் காரணம் என பிரியங்கா காந்தியும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"6 மாதங்களுக்கு முன்பே 'பொருளாதார சுனாமி' என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். அரசு வெறும் கண்துடைப்புக்காக தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. பாஜக அரசுதான் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவிகிதம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.