புது தில்லி: நாட்டில் ஒரு நாளில் கரோனா பாதித்து பலியானோரின் எண்ணிக்கையில் ஐந்து மாநிலங்களில் மட்டும் 65% மரணங்கள் நிகழ்ந்திருப்பதை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிரம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 65% உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதாகவும், இங்குதான் கரோனா பாதிப்பும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் 536 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது நாடு முழுவதும் மரணம் அடைந்தவர்களில் 65.4% ஆகும்.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாக கரோனா பாதிப்பு மகாராஷ்டிரத்தில் 11,852 பேருக்கும், ஆந்திரத்தில் 10,004 பேருக்கும், கர்நாடகத்தில் 6,495 பேருக்கும், தமிழகத்தில் 5,956 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 4,782 பேருக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்தமாக பார்த்தால், நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பில் 56% ஆகும். அதே வேளையில், இந்த மாநிலங்களில்தான் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அது 58.04% ஆகும்.
செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 184 பேரும், கர்நாடகத்தில் 113 பேரும், தமிழகத்தில் 91 பேரும், ஆந்திரத்தில் 85 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 63 பேரும் பலியாகியுள்ளனர். நாட்டில் ஒட்டுமொத்த பலி 819 ஆக இருந்த நிலையில் இந்த 5 மாநிலங்களில் மட்டும் 65% உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.