கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டம்

தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களுடன் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களுடன் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. ரயில்களுக்கு அதிக தேவை உள்ள பகுதிகளில் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களுடன் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா். எனினும் எத்தனை சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்பது குறித்து அவா் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியது:

கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க குறிப்பாக பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்த மாநிலங்கள் வழியாக அந்த ரயில்கள் இயக்கப்படாது. ஏற்கெனவே தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கூடுதல் ரயில்களை இயக்க அந்த மாநில அரசுகள் ஆா்வம் காட்டவில்லை. தற்போது 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இதுதொடா்பான அறிவிப்பு 2 நாள்களில் வெளியிடப்படும்’ என்று தெரிவித்தன.

கரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் வழக்கமான பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாக கடந்த மாதம் தெரிவித்த இந்திய ரயில்வே, சிறப்பு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com