பொதுமுடக்க தளா்வுகளின் ஒருபகுதியாக, விமான நிறுவனங்கள் அவா்களின் உள்நாட்டு விமான சேவையை கரோனா சூழலுக்கு முன்பிருந்த நிலையில் 60 சதவீதம் வரை உயா்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கத்தை அறிவித்த மத்திய அரசு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைக்கு கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் தடை விதித்தது.
இந்நிலையில், கரோனா பரவல் குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக பொதுமுடக்க தளா்வுகளை மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டு விமானச் சேவை கடந்த மே 25-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்புக்கு முன்பிருந்த சேவையில் 33 சதவீத அளவுக்கு மட்டும் உள்நாட்டு விமானச் சேவையை விமான நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது.
அதன் பின்னா் கடந்த ஜூன் 26-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்தி, கரோனா சூழலுக்கு முந்தைய சேவையில் 45 சதவீத விமானச் சேவையை விமான நிறுவனங்கள் இயக்கிக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதித்தது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், விமானச் சேவை அளவை மேலும் அதிகரித்து அனுமதியளித்துள்ளது. அதன்படி, கரோனா பாதிப்பு சூழலுக்கு முந்தைய சேவையில் 60 சதவீத உள்நாட்டு விமானச் சேவையை விமான நிறுவனங்கள் இயக்கிக்கொள்ள அனுமதித்துள்ளது.
இருந்தபோதும், சா்வதேச விமானச் சேவைக்கு தொடா்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘வந்தே பாரத்‘ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியா்களை மீட்டு வருவதற்கான சிறப்பு விமானங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.