பெங்களூருவில் தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்து, மார்பில் குண்டு பாய்ந்ததில், படுகாயமடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பி. ஷர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ஷர்மா, புதன்கிழமை மாலை, தனது வீட்டில் கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
59 வயதாகும் ஷர்மா, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை சுத்தம் செய்தபோது இது நிகழ்ந்ததாகவும், வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்ட ஷர்மாவின் மகள், உடனடியாக ஊழியர்களின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஷர்மா, தவறுதலாக துப்பாக்கி இயங்கியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.