மத வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக கருத்து பதிவிட்ட தெலங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங்கின் முகநூல் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெறுக்கக்கத்தக்க உள்ளடக்கத்தை கையாள்வது தொடர்பாக இந்திய எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தை சந்தித்த முகநூல் நிறுவனம் வன்முறை மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக தெலங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங்கின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை தடை செய்திருப்பதாகத் தெரிவித்தது
கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகை இந்தியாவில் வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தின் மீது மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக முகநூலின் இந்திய உயர்மட்ட பொது கொள்கை நிர்வாகி மீது குற்றம்சாட்டியது.
இந்தப் பிரச்னையை கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி இந்திய பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முகநூல் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. மேலும் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு முகநூல் நிறுவனத்தை கோரியது.
இந்நிலையில் நாடளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கமளித்த முகநூல் நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளர்கள் "வன்முறையை ஊக்குவிக்கும் அல்லது ஈடுபடுவோரை தடைசெய்யும் எங்கள் கொள்கையை மீறியதற்காக டி.ராஜா சிங்கை பேஸ்புக்கிலிருந்து தடை செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஆளும் அரசிற்கு ஆதரவாக முகநூல் நிறுவனம் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.