கர்நாடகத்தில் கரோனா பேரிடரால் கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் தவித்த 50 மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி கல்லூரியில் விரிவுரையாளர்கள் சேர்த்தனர்.
கர்நாடக மாநிலத்தின் ஷிராஹட்டி பகுதியில் கரோனா காரணமாக வேலையிழந்ததால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் ஒரு கல்லூரியின் 11 விரிவுரையாளர்கள் இணைந்து 50 மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்தினர். இதையடுத்து தனியார் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
இதுகுறித்து ராஜேஷ் ராமன் என்பவர் முகநூலில் பதிவிட்டதாவது, எந்தவொரு தொற்றும் கல்விக்கு இடையூறாக இருக்க முடியாது என்பதை கல்லூரி விரிவுரையாளர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இந்தாண்டு கல்லூரியில் சேர வராததை உணர்ந்த விரிவுரையாளர்கள் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேசி கல்லூரியில் சேர்ததுள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், கரோனா தொற்றால் பெற்றோர்கள் வேலையிழந்த நிலையில், இந்தாண்டு கல்லூரி செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன். இருப்பினும், எங்கள் விரிவுரையாளர்கள் எங்களுக்கு உதவினார்கள், அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் என தெரிவித்தார்.