உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரப்பிரரதேச மாநிலம் பல்லியா பகுதியில் பொதுமக்கள் ஒருவரை காவலர்கள் தாக்கியதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்லியா - லக்னெள சாலையில் தடுப்புகளை அமைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவலர்கள் கலைக்க முயன்றனர். அப்போது காவல்துறையினரின் மீது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக தடியடி நடத்தி காவல்துறையினர் பொதுமக்களை கலைக்க முயன்றனர். அப்போது காவலர்களை தாக்கி ஆறு இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் சேதப்படுத்தினர். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் போன்ற உயர்மட்ட காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் யாதவ், ''குற்றம் சாட்டப்பட்ட 35 வயதுடைய நபரை காவலர்கள் அடித்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் கலைக்க முயன்றபோது கற்களை வீசி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் லேசான தடியடி நடத்தி மறியல் கலைக்கப்பட்டது'' என்று கூறினார்.