கொல்கத்தா: பிறந்த குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனாவில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது.
மத்திய கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு சில நாள்களில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி கடும் காய்ச்சலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மூச்சு விடுவதில் சிரமம், சிறுநீரக தொற்று என உடல்நிலை கடுமையாக மோசமடைந்ததை அடுத்து, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் இதயம் 35 சதவீதம் மட்டுமே செயல்பட்டதால் செயற்கை சுவாசக் கருவி பொருத்த வேண்டியதும், ஏராளமான மருந்துகளை செலுத்துவதும் அவசியமாக இருந்தது.
சிகிச்சையின் பலனாக குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இரண்டு நுரையீரல்களும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பெரியவர்களுக்கு வழங்கப்படும் ஸ்டீராய்ட் உள்ளிட்ட மருந்துகளை குழந்தைக்கு அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பிறகுதான் குழந்தையின் இதயமும், நுரையீரலும் செயல்படத் தொடங்கின.
தற்போது அந்த குழந்தை பூரணமாக குணமடைந்துவிட்டது. ஆனால் தொடர்ந்து சில சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்கிறார் மருத்துவர்.
பிறந்து 42 நாள்கள் ஆன அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.