மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ஜோதிபிரியோ மல்லிக்கிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் பல்வேறு மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ஜோதிபிரியோ மல்லிக் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மல்லிக் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மல்லிக் நீரிழிவு நோயாளி என்பதால் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
முன்னதாக, மேற்கு வங்க அமைச்சர்கள் சுஜித் போஸ் மற்றும் ஸ்வபன் டெப்நாத் ஆகியோருக்கு தொற்று உறுதியான நிலையில் சமீபத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.