புவனேசுவரம்: ஒடிஸாவின் கலந்தி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் ஒடிஸாவின் கலந்தி மற்றும் கந்தமால் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் காவல்துறை சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் துணை ராணுவப் படையினர் கூட்டாக தீவிர தேடுதல் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீர்ர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த வீரர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்று அவர் கூறினார்.