டாக்கா: பல மாதங்களாக இரும்புச் சங்கலியில் பிணைத்து வைத்து, சித்தியால் கொடுமைக்கு உள்ளான 7 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் அஷுலியா பகுதியில் வாடகை வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 7 வயது சிறுவன், காவலர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீருடன் விவரித்தான்.
தனது சித்தி, நாள்தோறும் தன்னை இரும்புச் சங்கிலியால் பிணைத்து விடுவார் என்றும், அதற்கு மறுத்தால் கொம்பு அல்லது துடைப்பத்தால் தன்னை அடித்து, கழுத்தை நெறித்துக் கொலை செய்ய முயல்வார் எனவும் சிறுவன் கூறியுள்ளான். சிறுவனின் உடல் முழுவதும் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் அடித்த தழும்புகள் காணப்படுகின்றன.
சிறுவனை, அவனது சித்தி கொடுமைப்படுத்துவது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். சிறுவனை கொடுமைப்படுத்திய சித்தி மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறுவனின் தந்தை கொத்தனாராக, பரிசல் மாவட்டத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவம் குறித்து தந்தை மற்றும் சித்தி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.