நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மக்களவை துணைத் தலைவரை நியமிக்க வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சில நாள்களுக்கு முன்னதாக அவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2019 தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்பட்ட மக்களவையில் இதுவரை துணைத் தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசியலமைப்பு ஆணையை மேற்கோள் காட்டி, துணைத் தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார்.
'மழைக்கால அமர்வின்போது மக்களவையின் துணைத் தலைவரை ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு ஆணையை, மக்களவை பின்பற்றும் என நான் நம்புகிறேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை அதன் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தயாராகி வருகிறது. ஏற்கெனவே ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், மக்களவை துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க இது சரியான தருணம் என்றும் கூறியுள்ளார்.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், பாஜகவில் 303 உறுப்பினர்களும், காங்கிரஸில் 53 உறுப்பினர்களும் உள்ளனர்.