புது தில்லி: தில்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையை துரிதப்படுத்தும் வகையில் அவசர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் மற்றும் இரண்டாம் நிலை கரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. மூன்றாம் நிலை கரோனா தொற்றுக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கரோனா தொற்று தீவிரமான நபருக்கு பிளாஸ்மா தெரபி முறை பலனளிக்காது என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வை சுட்டிக்காட்டினார்.
சுகாதார கண்காணிப்பாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர் விஜய்தேவ், உடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று (புதன்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார். இதில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதல்வர் அனுமதியளித்தார்.
மேலும் சிகிச்சையை துரிதப்படுத்தும் வகையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதை தெரிவித்தார்.
தில்லியில் 4,039 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது இதுவே முதல்முறை.
கரோனா பரிசோதனைகளை அதிகரித்ததே தொற்று அதிக அளவில் பதிவாக காரணம். புதன்கிழமை நிலவரப்படி 54,517 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.