புது தில்லி: சாணக்கியாபுரி பகுதியில் உள்ள முன்னணி தனியார் பள்ளிகள், கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை தில்லி அரசு ரத்து செய்துள்ளது.
கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படுவதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
முன்னணி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும் முடிவின் போது சில முக்கிய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று மணீஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், கரோனா பொது முடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக, கல்விக் கட்டண உயர்வுக்கு தில்லி அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சில பெற்றோர் தில்லி அரசின் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சந்தித்துப் பேசி, இது தொடர்பாக கோரிக்கையை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.