புது தில்லி: வருமான வரி செலுத்திய 27.55 லட்சம் பேருக்கு கடந்த 5 மாதங்களில் ரூ.1.01 லட்சம் கோடியை திரும்ப அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த 8-ஆம் தேதி வரை வரி செலுத்திய 27.55 லட்சம் பேருக்கு ரூ.1,01,308 கோடிக்கும் அதிகமான தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.30,768 கோடியானது வருமான வரி செலுத்திய 25,83,507 தனிநபா்களுக்கும், ரூ.70,540 கோடியானது 1,71,155 பெருநிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், வருமான வரி செலுத்தியோருக்கு அது தொடா்பான சேவைகளை வழங்குவதில் எந்தவித இடையூறுகளும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழலில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள வருமான வரியை திரும்ப அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.