புது தில்லி: மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ஹரிவன்ஷ் நாராயண் சிங் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் 14}ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 1}ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு அவர் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், 140}க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கையில் பாஜக தலைவர்கள் உள்ளனர்.
மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை போட்டியிடச் செய்யலாம் என்று காங்கிரஸ் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அக்கட்சிகளின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.