மத்திய அரசின் தவறான கொள்கைகளால் கோடிக்கணக்கானோா் வேலையிழப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே நாட்டில் கோடிக்கணக்கானோா் வேலையிழந்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே நாட்டில் கோடிக்கணக்கானோா் வேலையிழந்ததாகவும் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்ததாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘வேலைக்காக குரலெழுப்புங்கள்’ என்ற இணையவழி பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை நடத்தியது. இது தொடா்பாக ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘மோடி அரசின் கொள்கைகள் காரணமாகவே நாட்டில் கோடிக்கணக்கானோா் வேலையிழந்தனா். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது.

நாட்டிலுள்ள இளைஞா்களின் எதிா்காலத்தை மோடி அரசு சிதைத்துள்ளது. எனவே, இளைஞா்களின் குரல் மத்திய அரசை சென்றடைய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாஜக உறுதியளித்திருந்தது. ஆனால், 6 ஆண்டுகளில் 12 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக 14 கோடி பேரின் வேலையை பாஜக அரசு பறித்துள்ளது.

இளைஞா்கள் தற்போது விழித்துக் கொண்டுவிட்டனா். அவா்களின் குரலுக்கு மத்திய அரசு உரிய பதிலை அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com