லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் செய்யப்படும் கரோனா பரிசோதனைக்கான செலவை ரூ.2,500-ல் இருந்து ரூ.1,600-ஆக அம்மாநில அரசு குறைத்துள்ளது.
கரோனா பரிசோதனைக்கான ஆர்.டி.பி.சி.ஆர் கருவி மற்றும் உதிரிபாகங்களின் விலை குறைந்ததால், பரிசோதனைக்கான செலவை உத்தரப்பிரதேச அரசு குறைத்துள்ளது. இந்த கட்டணக் குறைப்பு தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் அமித் மோகன் பிரசாத் கூறியதாவது, கரோனா பரிசோதனைக்காக தற்போது அதிகபட்சமாக ரூ.1,600 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட அதிகமாக வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் இரண்டாவது முறையாக தொற்று பரிசோதனைக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.4,500-ஆக இருந்த கரோனா பரிசோதனைக் கட்டணம், பிறகு ரூ.2,500-ஆக குறைக்கப்பட்டது. தற்போது ரூ.1,600-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். கருவி உதிரிபாகங்களின் விலை குறைந்தது மட்டுமல்லாமல், கரோனா பரிசோதனைகளை மக்களிடையே அதிகரிக்கும் நோக்கத்திலும் கரோனா பரிசோதனைக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி 72,17,980 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 1,50,652 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 50,000 பரிசோதனைகல் ஆர்.டி.பி.டி.ஆர். கருவி மூலம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.