நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து அண்மையில் மீண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முழுமையான மருத்துவப் பரிசோதனைக்காக, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
அண்மையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை முடிந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.
அவ்வாறு அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது அளிக்கப்பட்ட மருத்துவ ஆலோசனையின்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு நாள்கள் தங்கியிருந்து முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்காக மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.