இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்வது வருத்தமளிக்கிறது என நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.
இன்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட 12 மாணவர்களின் அவல நிலை குறித்து மக்களவையின் கவனத்தையும், அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறேன். அவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின் மூலமாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.
பிளஸ் 2 முடித்து அவர்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் நீட்தேர்வு எழுத வேண்டும். மாநில பாடத்திட்டமும், சிபிஎஸ்இ பாடத்திட்டமும் வெவ்வேறாக இருப்பதால் அவர்கள் குழப்புகிறார்கள். இதுகுறித்து எந்த உதவியும் கிடைக்காததால் அவர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்கிறார்கள், இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்வது வருத்தமளிக்கிறது என்று பேசியுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் இன்று தொடங்கியுள்ளது. அக்டோபர் 1 வரை 18 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.