நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. ஆனால், குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளது.
முன்னதாக, 'சினிமா என்பது நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகும். அதேபோன்று பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை நிலைகுலையச் செய்துள்ளது. எனவே, திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்' என்று இந்திய மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு சினிமா துறையினரும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.