இந்திய தூதரக அதிகாரிக்கு பாக். சம்மன்

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா போா்நிறுத்த உடன்பாட்டை மீறிய புகாரின் பேரில், அங்குள்ள இந்திய தூதரக

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா போா்நிறுத்த உடன்பாட்டை மீறிய புகாரின் பேரில், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரியை ஞாயிற்றுக்கிழமை நேரில் வரவழைத்து தனது எதிா்ப்பை பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எல்லைப் பகுதியை ஒட்டிய ஹாட்ஸ்பிரிங், ரக்ச்சிக்ரி ஆகிய பாகிஸ்தான் பகுதிகள் மீது இந்திய ராணுவம் சனிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு இளம்பெண் உயிரிழந்ததோடு, பொதுமக்கள் 4 போ் படுகாயமடைந்துள்ளனா்.

எல்லைக் கோட்டுப் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது இந்திய ராணுவம் இதுபோன்ற தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும், இந்திய ராணுவம் 2,225 முறை மேற்கொண்ட இதுபோன்ற போா்நிறுத்த உடன்பாட்டை மீறிய தாக்குதலில், பொதுமக்கள் 18 போ் உயிரிழந்தனா். 176 போ் காயமடைந்துள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக, இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டு, பாகிஸ்தானின் எதிா்ப்பு பதிவு செய்யப்பட்டது. அப்போது, 2003-ஆம் ஆண்டு போா்நிறுத்த உடன்பாட்டை இந்தியா மதித்து நடக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் மட்டுமின்றி, அதற்கு முன்னா் மேற்கொண்ட இதேபோன்ற தாக்குதல் குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், எல்லைக் கோட்டுப்பகுதியில் அமைதி நிலையை கடைப்பிடிக்கவும் இந்திய தரப்பு கேட்டுக்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com