இந்தியாவில் சராசரி அளவைக் காட்டிலும் 2019ஆம் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 அதிதீவிர புயல்கள் ஏற்பட்டதாக மத்திய புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வழக்கமான சராசரி அளவைக் காட்டிலும் அதிகம்.
1891 முதல் 2017 வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக வங்காள விரிகுடாவில் 4 புயல்களும் மற்றும் அரபிக்கடலில் ஒரு புயலும் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் வருடத்திற்கு சராசரியாக ஒரு புயல் ஏற்படும் எனும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 5 புயல்கள் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இவை தீவிரமான புயல்களாக இருந்ததாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அரசுத் தரப்பு தகவலின்படி அரபிக் கடலில் அதிதீவிரமான அளவில் 2017ஆம் ஆண்டு ஒரு புயலும், 2018ஆம் ஆண்டு 3 புயல்களும்,2019ஆம் ஆண்டில் 5 புயல்களும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் வங்காள விரிகுடாவில் அதிதீவிரமான அளவில் 2017ஆம் ஆண்டில் 2 புயல்களும், 2018ஆம் ஆண்டில் 4 புயல்களும்,2019ஆம் ஆண்டில் 3 புயல்களும் ஏற்பட்டுள்ளன.