நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் விவசாயக் கொள்கையை எதிர்த்து இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றுப் பரவலின் மத்தியில் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து சமீபத்தில் விவசாய கொள்கை சீர்த்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் கரோனா பொதுமுடக்க காலத்தில் விவசாய கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக இடதுசாரி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"கரோனா பொதுமுடக்கம் என்ற பெயரில் அரசாங்கம் அரசியலமைப்பின் ஜனநாயகம், நாடாளுமன்றம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விடுகிறது. எனவே சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகளைச் சேர்ந்த நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ”என்று சிபிஐ எம்.பி. பினாய் விஸ்வாம் தெரிவித்தார்.
சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.ரகேஷ் கூறுகையில், “இந்த மூன்று கட்டளைகளும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை. அவை தனியார் நிறுவனங்களின் நலனைக் காப்பாற்றுவதற்காக அறிவிக்கப்படுகின்றன. அதனால்தான் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
அண்மையில் மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய விவசாய கொள்கை சீர்த்திருத்தங்களுக்கு எதிராக ஹரியானா, பஞ்சாபில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.