கரோனா தொற்று காரணமாக அதிகரித்த செலவினங்களை ஈடுகட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைப்பது தொடர்பான சட்ட மசோதா மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா திங்கள்கிழமை காலை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம்- 2020-க்கு மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, கரோனா செலவினங்களைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒப்புதல் அளித்து, ஏப்ரல் 7-ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.