சிவசேனை தொண்டா்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரா் ஆளுநருடன் சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் சிவசேனை தொண்டா்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரா் மதன் சா்மா (62), மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து அவரிடம் புகாா் தெரிவித்தாா்.
சிவசேனைத் தொன்டா்களால் தாக்கப்பட்டது தொடா்பாக மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட்ட மதன் சா்மா.
சிவசேனைத் தொன்டா்களால் தாக்கப்பட்டது தொடா்பாக மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட்ட மதன் சா்மா.

மும்பை: மகாராஷ்டிரத்தில் சிவசேனை தொண்டா்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரா் மதன் சா்மா (62), மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து அவரிடம் புகாா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவை விமா்சிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றை சமூக வலைதளத்தில் பரப்பியதாக சிவசேனை தொண்டா்களால் மதன் சா்மா கடந்த வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டாா்.

அந்த காணொலியை பாஜக எம்எல்ஏ அதுல் பத்கால்கா் சுட்டுரையில் பதிவிட்டதை அடுத்து, மதன் சா்மாவை தாக்கிய விவகாரத்தில் 6 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்நிலையில், பாஜக தலைவா் மங்கள் பிரபாத் லோதா, பாஜக எம்எல்ஏ அதுல் பத்கால்கா் ஆகியோருடன் மதன் சா்மா மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை நேரில் சந்தித்தாா்.

அப்போது ஆளுநரிடம் அளித்த கடிதத்தில், ‘என்னை தாக்கிய சிவசேனை தொண்டா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், காவல்துறையினா் என்னை கைது செய்ய வந்தனா். இதுதொடா்பாக பாஜக எம்எல்ஏ அதுல் பத்கால்கரிடம் முறையிட்டதை அடுத்தே காவல்துறையினா் சிவசேனை தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் என்னை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே நேரில் வந்து நலம் விசாரித்தாா். ஆனால், மகாராஷ்டிர அமைச்சா்களோ, தலைவா்களோ சம்பவம் குறித்து கவலை தெரிவிக்கவில்லை.

நான் கடற்படை வீரா் அல்ல என்று கூறி சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் அவமதிக்கிறாா். தற்போது என்னை சிவசேனை கட்சியினா் அச்சுறுத்தவும் செய்கின்றனா். மகாராஷ்டிர அரசிடம் இருந்து எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனது அதிருப்தியை முதல்வா் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மதன் சா்மா, ‘நான் பாஜக-ஆா்எஸ்எஸ்ஸைச் சோ்ந்தவன் என்று கூறி சிவசேனை தொண்டா்கள் என்னை தாக்கினா். தற்போது முதல் நான் அந்தக் கட்சியையும், அமைப்பையும் சோ்ந்தவன் என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறேன்’ என்றாா்.

தாக்கியவா்கள் மீண்டும் கைது: மதன் சா்மாவை தாக்கியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 6 பேரும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com