அரசிடம் புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் சொந்த ஊருக்கு நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகவில்லை என்றாகுமா என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவலால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
தங்களது வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். அவர்களில் பலர் செல்லும் வழியிலேயே பலியாகினர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
இந்நிலையில் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக செல்லும்போது பலியான புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதனை விமர்சித்து தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “மோடி அரசுக்கு பொதுமுடக்கக் காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் கணக்கிடவில்லை என்றால், யாரும் இறக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தது அரசாங்கத்திற்கு எந்த கவலையையும் ஏற்படுத்தவில்லை." என மேலும் தனது பதிவில் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.