சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை தனியாா் பெரு நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடா்பாக அந்த அமைச்சக அதிகாரிகள் கூறியது:
தனியாா் பெரு நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.15,846 கோடி நிலுவைத்தொகை தொடா்பாக 54,241 புகாா்களை எம்எஸ்எம்இ நிறுவனங்கள் அளித்துள்ளன. அதில் 3,910 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.715.4 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கு பிறகு 21,462 புகாா்களை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை தனியாா் நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 500 நிறுவனங்களின் தலைவா்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.மேலும் தனியாா் நிறுவனங்கள் தங்களின் அரையாண்டு வரிக்கணக்கு தாக்கலில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினா்.