கருத்து சுதந்திரத்தை தடுப்பதற்கு தேசத் துரோக சட்டத்தை இரும்புக் கரத்துடன் மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுா் குற்றம்சாட்டியுள்ளாா்.
அதுபோல, மாநில அரசுகளைப் பொருத்தவரை, தவறான செய்தி பரப்புவதாக குற்றம்சாட்டி கருத்து சுதந்திரத்தை தடுப்பதாகவும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக தில்லியில் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
கருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத்துரோக வழக்கையும், தவறான செய்தி வெளியிடு என்ற குற்றச்சாட்டின் பேரிலும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
சுவாசக் கருவி பற்றாக்குறை என்பன உள்ளிட்ட கரோனா பாதிப்பு குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளா்கள் மீது தவறான செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது இதற்கு சிறந்த உதாரணம். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மட்டும் 70 தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமா்சித்த குற்றச்சாட்டின் பேரில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பொருத்தவரை, அவருடைய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.
அதுபோல, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மருத்துவா் கஃபீல் கானின் கருத்துகளும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.