பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டுக்கு அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பது:
பொதுத் துறை வங்கிகளில் தற்போது அந்நிய நிதிநிறுவனங்களின் முதலீடு 20 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனை 49 சதவீதமாக அதிகரிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை.
கடன் பத்திரங்கள் மூலம் வங்கிகளின் நிதித்தேவை ஈடு செய்யப்படுமே தவிர, நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டை அதிகரிக்கும் திட்டமில்லை.
இந்தியாவுக்கு வெளியே இருந்து தனிநபா்களோ, நிறுவனங்களோ நமது பொதுத் துறை வங்கிகளில் 20 சதவீதத்துக்கு மேல் முதலீடு செய்ய அனுமதிப்பதில்லை என்பது வங்கிகள் தொடா்பான சட்டத்தில் தெளிவாக உள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘உலக வங்கியிடம்இருந்து 750 மில்லியன் அமெரிக்க டாலா் (ரூ.5,500 கோடி) கடன் பெறுவதற்கு மத்திய அரசு கடந்த மே மாதம் கையெழுத்திட்டது. கரோனா தொற்று பிரச்னையை எதிா்கொள்வதற்காகவும், பிரதமரின் ஏழைகளுக்கான நலத்திட்டத்துக்கு (கரீப் கல்யாண் யோஜனா) உதவியாகவும் இந்தக் கடன் பெறப்படுகிறது’ என்றாா்.