கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலை பொது முடக்கம் கட்டுப்படுத்தியது என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரத்தை வெளியிடக்கோரி காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா மாநிலங்களவையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், 14 முதல் 29 லட்சம் வரையிலான கரோனா பாதிப்புகளை பொது முடக்கம் கட்டுப்படுத்தியதாக மக்களவையில் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி ஆனந்த் சர்மா பேசியதாவது:
"பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் சுமார் 14 முதல் 29 லட்சம் வரையிலான பாதிப்புகளையும், 37 முதல் 78 ஆயிரம் வரையிலான பலிகளையும் கட்டுப்படுத்தியதாக நேற்றைய அறிக்கையில் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கை எதன் அடிப்படையில் கிடைத்தது. இதன் அறிவியல் பின்னணியை அவையில் தெரிவிக்க வேண்டும்.
பொது முடக்கம் அமல்படுத்தும்போது நாட்டில் 600 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இது 50 லட்சமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தேவை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 30 சதவிகித படுக்கை வசதிகளே உள்ள நிலையில், 70 சதவிகித நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த சூழலில் இருந்து பாடம் கற்று, பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையடுத்து, பாஜக எம்.பி. வினய் தெரிவிக்கையில், "மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்த பிறகே பொது முடக்கம் பற்றி மத்திய அரசு முடிவு செய்தது. எந்தவொரு முடிவும் திணிக்கப்படவில்லை" என்றார்.