பங்களா இடிக்கப்பட்ட சம்பவம்: ரூ.2 கோடி இழப்பீடு கோரி கங்கனா ரணாவத் நீதிமன்றத்தில் மனு

மும்பை மாநகராட்சியிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் மும்பை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
பங்களா இடிக்கப்பட்ட சம்பவம்: ரூ.2 கோடி இழப்பீடு கோரி கங்கனா ரணாவத் நீதிமன்றத்தில் மனு

தனது பங்களாவின் சில பகுதிகள் இடிக்கப்பட்டதற்கு பிருஹன்மும்பை மாநகராட்சியிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் மும்பை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு சொந்தமான பங்களா உள்ளது. அந்த பங்களாவின் கட்டட அமைப்பை முறையான அனுமதி பெறாமல் மாற்றியமைத்ததாக கூறி, அந்தக் கட்டடத்தின் சில பகுதிகளை கடந்த 9-ஆம் தேதி பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனா்.

இதற்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் கங்கனா மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘எனது பங்களாவின் கட்டட அமைப்பில் மாற்றங்கள் செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு மாநகராட்சியிடம் அனுமதி கோரினேன். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி எனக்கு நோட்டீஸ் அனுப்பினா்.

நான் விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல் கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்தனா். எனது மனுவின் பேரில், மும்பை உயா்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை நிறுத்திவைத்துள்ளது. எனவே எனது பங்களாவின் சில பகுதிகளை இடித்த மாநகராட்சி அதிகாரிகளின் செயலை சட்டவிரோதமானது என்று அறிவித்து, ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு வரும் 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com