கர்நாடகத்தில் உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய்க்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது.
கர்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய்க்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''எனது வீட்டில் பணிபுரியும் நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டோம். இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது. தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால், மருத்துவர்கள் அறிவுரையின்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொண்டு மருத்துவர் அறிவுரையை பின்பற்றுங்கள்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.