புதிய கல்விக் கொள்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொலைநோக்குப் பார்வைக்கான தொடக்கம் என மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இணையவழி தேசிய கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
"இந்திய வரலாற்றிலேயே ஒரு திட்டம் வடிவமைப்பதற்கு 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள், 6,600 வட்டாரங்கள் மற்றும் 676 மாவட்டங்கள் பங்களித்திருப்பது இதுவே முதன்முறை. உண்மையிலேயே இதுவொரு தேசியக் கொள்கை. கல்வித் துறையில் இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொலைநோக்குப் பார்வைக்கான தொடக்கம்.
புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கும், பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கருத்தை வெளிப்படுத்துவதற்காக மட்டும் தாய்மொழி அல்ல. தாய்மொழியில் கற்பது எளிதானது.
உலகின் இளம் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இளைஞர்களின் சக்தியால் பெரிய இலக்குகளை அடைய முடியும். இந்த சக்தியைக் கண்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்."
புதிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது.