தில்லியில் வாக்குவாதத்தின்போது தூய்மைப் பணியாளரை கத்தியால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தில்லி நேரு நகர் பகுதியை சேர்ந்த சோன்பால் (30) என்பவர் ஜாமியா நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே ஜாமியா பகுதியை சேர்ந்த முகமது ஷிராஷ் (28) என்பவர் தூய்மைப் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜாமியா பகுதியில் இன்று காலை 7 மணியளவில் நடைபெற்ற வாக்குவாதத்தில் தூய்மைப் பணியாளரை கத்தியால் முகமது தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தூய்மைப் பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முகமதுவை கைது செய்தனர். தூய்மைப் பணியாளர் சரியாக தூய்மைப் பணியில் ஈடுபடவில்லை என முகமது வாக்குவாத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முகமது கத்தியால் தாக்கியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கழுத்துப் பகுதியில் பலத்த காயத்துடன் தூய்மைப் பணியாளர் சோன்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.