கரோனாவால் இறந்த மருத்துவப் பணியாளர்களின் விவரங்கள் இல்லை: மத்திய அரசு
கரோனா பாதிப்பால் இறந்த மருத்துவப் பணியாளர்களின் விவரங்கள் இல்லை என்ற மத்திய அரசின் பதிலுக்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொதுசுகாதாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கரோனாவால் பலியான மருத்துவப் பணியாளர்களின் விவரங்கள் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் சுகாதாரப் பணியாளர்களை மத்திய அரசு கைவிடுவதாக அச்சங்கம் தனது கண்டனக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் கரோனா பேரிடர் காலத்தில் பணியில் ஈடுபட்டு இறந்த 382 மருத்துவப் பணியாளர்களின் பட்டியலை வெளியிட்டு அவர்களை தியாகிகள் என குறிப்பிட வேண்டும் என மத்திய அரசை மருத்துவ சங்கம் கோரியுள்ளது.
மத்திய அமைச்சரின் பதில் அலட்சியமானது எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவ சங்கம் இந்தியாவைப் போல் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இறக்கவில்லை என தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காக்க தங்களின் உயிரைத் தியாகம் செய்த மருத்துவப் பணியாளர்களின் விவரங்களைப் பராமரிக்காததன் மூலம் தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை நிர்வகிப்பதற்கான தார்மீக அதிகாரத்தை மத்திய அரசு இழந்து விட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.