உத்தரப் பிரதேசத்தில் தவாலி கிராமத்தில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்.15-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு தவாலி கிராமத்தில் வசிக்கும் பெண் முர்ஷிதா(25). கணவர் முர்சலீன் மற்றும் அவரது பெற்றோர்கள் வரதட்சிணையாக கார் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை பெண் வீட்டில் வாங்கிக்கொண்டு வரும்படி முர்ஷிதாவை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
திருமணமாகி 7 வருடங்களாகப் முர்ஷிதாவை தினமும் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நான்கு மாத கர்ப்பிணியான முர்ஷிதாவை கடந்த செவ்வாயன்று ஒரு அறையில் பூட்டிவைத்து உணவு வழங்காமல், கணவரும், மாமியாரும் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர், தனது தந்தைக்கு நடந்த சம்பவத்தை தொலைபேசி மூலம் விவரித்துள்ளார் அந்த பெண். இதையடுத்து, பெண்ணின் தந்தை விரைந்துவந்து மீட்டுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்துள்ளார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பெண்ணின் தந்தை தன் மகளை கணவரும், மாமியாரும் அடித்துக் கொன்றதாக, ஷாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறப்புக்கான சரியான காரணத்தை தெரிந்தபின்னரே வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.