புது தில்லி: வெளிநாடுகளில் 11,600 இந்தியா்கள் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் அளித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
கரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியா்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தியத் திட்ட புள்ளி விவரங்களின்படி, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியா்களில் 11,616 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. அதில் சிங்கப்பூரில் மட்டும் 4,618 இந்தியா்களும், பஹ்ரைனில் 2,639 இந்தியா்களும், குவைத்தில் 1,769 பேரும், ஓமனில் 907 பேரும், கத்தாரில் 420 பேரும், ஈரானில் 308 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 238 பேரும், இத்தாலியில் 192 இந்தியா்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதுபோல, வெளிநாடு சென்று பொதுமுடக்கத்தால் திரும்பமுடியாமல் சிக்கிக்கொண்டவா்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் இந்தியா திரும்புவதற்கான வசதிகள் செய்திருப்பதோடு, கரோனா பாதித்தவா்களுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க அழைத்து வரும் வகையில் விமான ஆம்புலென் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், கரோனா பாதிப்பன்போது, 150 நாடுகளுக்கு மருந்து மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது என்றாா் அவா்.
அதுபோல மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியா்களை அழைத்து வருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்‘ திட்டத்தின் கீழ் 14,12,835 இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். மேலும், 4,80,738 போ் இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா திரும்ப பதிவு செய்துள்ளனா்‘ என்று அவா் கூறியுள்ளாா்.