புது தில்லி: கரோனா நோய்த் தொற்றால் புதன்கிழமை மறைந்த திருப்பதி தொகுதி எம்.பி. பாலி துா்காபிரசாத் ராவுக்கு (65) மக்களவையில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அதன் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியதும், நடப்பு கூட்டத்தொடரின் உறுப்பினா் பாலி துா்காபிரசாத் ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து உறுப்பினா்களும் மெளன அஞ்சலி செலுத்தினா். பின்னா் அவையை மாலை 4 மணி வரை மக்களவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த துா்காபிரசாத் ராவ் கடந்த மாதம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.