புது தில்லி: கரோனா பாதிப்பால் இறந்த மருத்துவப் பணியாளர்களின் விவரங்கள் இல்லை என்ற மத்திய அரசின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, முன்களப் பணியாளர்களை ஏன் அவமதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் பொதுசுகாதாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கரோனாவால் பலியான மருத்துவப் பணியாளர்களின் விவரங்கள் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி சௌபே மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து வெளியான செய்தியை டேக் செய்து, தனது சுட்டுரையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், புள்ளி விவரங்களை பராமரிக்காத மோடி அரசு! தட்டுகளில் ஒலி எழுப்புவதைவிடவும் விளக்குகளை ஏந்துவதை விடவும், கரோனா பேரிடர் காலத்தில் முன்னின்று போராடும் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பும் மரியாதையும் அளிப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசே, கரோனா முன்களப் பணியாளர்களை ஏன் அவமரியாதை செய்கிறீர்கள்? என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.