தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருவதாக இந்திய விமான போக்குவரத்து ஆணையம் (ஏஏஐ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அகலமான ஓடுபாதை, புதிய விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம், புதிதாக உள்நாட்டு போக்குவரத்து முனையக் கட்டடம் ஆகிய வசதிகளுடன் ரூ.381 கோடியில் தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
13,350 சதுர மீட்டா் பரப்பளவில் விரிவுபடுத்தப்படும் இந்த விமான நிலையத்தில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். தீயணைப்பு நிலையம், விமானங்கள் நிறுத்துமிடம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.