கரோனா பொதுமுடக்கத்தால் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ள மாநிலங்களுக்கு உதவ உலக வங்கியிடமிருந்து மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.
அந்தக் கட்சியின் நாளிதழான ‘சாம்னா’வில் வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கரோனா பொது முடக்கம் தவறாக கையாளப்பட்ட காரணங்களினாலேயே, நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்த நெருக்கடி நேரத்தில், மாநிலங்களுக்கு உதவுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் மகாராஷ்டிரம், குஜராத், உத்தர பிரதேசம், தமிழகம் மற்றும் தில்லி மாநிலங்கள் ஏறத்தாழ ரூ.14.4 லட்சம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.
இந்த பாதிப்பைச் சமாளிக்க பல மாநிலங்கள் மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளன. மகாராஷ்டிரம் சாா்பில் ஜிஎஸ்டி பங்காக ரூ.23,000 கோடி கோரப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார பாதிப்புக்கு மத்திய அரசே முழு பொறுப்பு என்பதால், மாநிலங்களுக்கு உதவ உலக வங்கியிடமிருந்து மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.